Tuesday 6 October 2009

சக்தி SUPERSTAR SEASON 3 ஒரு பார்வை

மீண்டும் சக்தி குழுமத்தின் நல்ல முயற்சி. இலங்கையின் இளம்பாடகருக்கு முடி சூட்டும் விழா. சிறப்பாக நடைபெற்று முடிந்த season 1, season 2வைத் தொடர்ந்து season 3 விமரிசையாக வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது . தொலைக் காட்சியில் பார்க்க சந்தர்ப்பங்கள் இல்லாமையால் வானொலியில்தான் கேட்டுவருகிறேன்.சில விடயங்கள் மனதிற்கு மகிழ்ச்சியையும் சில விடயங்கள் என் இப்படி? என்ற ஆதங்கத்தையும் தருகிறது.
முதலாம் இரண்டாம் சுற்றுக்கள் .......
10 000 பேர் கொண்ட முதலாவது சுற்றிலிருந்து 1000 பேர் தெரிவு செய்யப்பட்டு இரண்டாம் சுற்றிற்கு அனுப்பப்பட்டு மூன்றாம் சுற்று 100 பேராக சுருக்கப்பட்டு போய்க்கொண்டிருக்கிறது.முதலாம் இரண்டாம் சுற்றுகளில் தேர்வாகாத போட்டியாளர்களில் மாற்றக்கருத்துக்களை பகிர்ந்துகொண்டோரின் கருத்துக்களையும் ஒலி, ஓளி பரப்பி நிகழ்ச்சியை பார்க்காமல் கேட்காமல் இருந்தவர்களையும் பார்க்க வைக்க சக்தி நல்ல யுக்தியைக் கையாண்டது. நடுவர்களை கடுமையாக சாடினார்கள் அந்தப் போட்டியாளர்கள். ஒரு ரசிகனாக போட்டியை ரசித்ததில் நடுவர்கள் எந்தப் பிழையான தீர்ப்பையும் வழங்கியதாக எனக்குத் தோன்றவில்லை.பாடகர்களை அவர்கள் தெரிவு செய்யும் விதமும் கூறிய அறிவுரைகளும் அவர்களின் திறமையையும் நல்ல நடுநிலைமையையும் உணர்த்தியது. தேர்வாகாத போட்டியாளர்கள் சிலபேரின் வார்த்தைகளில் காணப்பட்ட அமிலம் சற்றுக் கூச வைத்தது. இந்த வார்த்தைகளுக்கு சிலர் கைதட்டி உற்சாகமும் அளிக்கிறார்கள். பெண்களை நடுவர்கள் உடனே தெரிவு செய்கிறார்கள் என்ற விடயம் மாற்றுக்கருத்துடையோரின் கருத்துகளில் பெரும்பான்மையாகத் தொனித்தது. நன்றாகப் பாடிய எவரையும் நடுவர்கள் தேர்வு செய்யாது விட்டதாக ரசிகர்களாகிய எமக்கே புரிகிறது . ஆனால் போட்டியாளர்கள் ?????
நல்ல கலைஞனாக ஒருவன் உருவெடுக்க வேண்டுமெனின் சுய மதிப்பீடு என்ற விடயம் நன்றாக வளர்க்கப்பட்டிருக்க வேண்டும். முடிவுகளை ஏற்றுக்கொள்ளல் ஏற்காது என்பது இரண்டாம் பட்சம், முதலில் தன்னுடைய பிழைகளை மற்றவர்களைவிட முன்பதாக அடையாளம் காணப் பழகவேண்டும். இசை என்கிற உன்னத கலையை வெளிப்படுத்த வந்தவர்கள் நல்ல பண்புகள் இல்லாதவர்கள் ஆகின்றபோது அவர்களுடைய இசை கூட கணக்கில்லாமல் போய்விடும். கலைஞர்கள் புரிந்து கொள்ளுங்கள். நாகரிகத்தைப் பேணுங்கள். ஆனால் இந்த சிக்கல்கள் இனிவரும் சுற்றுக்களில் இடம் பெற சாத்தியகூறுகள் குறைவு போலத்தான் தெரிகிறது.

100 பேர் கொண்ட பிரமாண்டமான சுற்றில் .........
மூன்றாம் சுற்றில் பாடகர்கள் பின்னணி இசையோடு பாடல்களை பாடுகின்றனர். நண்பர்களோடு நிகழ்ச்சியைக் கேட்கின்றபோது "இந்தியாவில் என்ன மாதிரிப் பாடுறானுங்கள் இவங்கள் எங்கை ....." என்று அலுத்துக் கொள்கிறார்கள். அவ்வளவு மோசமாகப் பாடுகிறார்களா இலங்கைக் கலைஞர்கள் ? ஏன் இந்தத் தோற்றப்பாடு??
நன்றாக அவதானித்தால் பாடகர்களில் பிரச்சினை இருப்பதாக தெரியவில்லை. கோளாறு இருப்பது பின்னணி இசையில். கோளாறு என்பதற்காக அவர்கள் இசையைத் திறமையாக வழங்கவில்லை என கூறவில்லை. இசைக்கப்படும் பின்னணி இசை Original Backround Music ஐ ஒத்ததாக இல்லாதிருப்பதே இதற்குரிய காரணம் போல தோன்றுகிறது. இசைக்கு பொறுப்பானவர்கள் ரட்ணம் குழுவினர் என நினைக்கிறேன். உண்மையில் அவர்கள் அனைவரும் திறமையான கலைஞர்கள். வழங்கப்படும் பின்னணி இசை பாடகர்களின் சுருதி ,லயம் என்பவற்றைப் பேணுவதற்கு எனப் புரிகிறது. ஆனால் இந்த நிலைப்பாட்டை எல்லா ரசிகர்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அத்தோடு சில பாடல்களுக்கு வழங்கப்படும் தாள வாத்தியமாக பொருத்தமில்லாத வாத்தியங்களைப் பாவிப்பது ஒரு மாதிரியாக இருக்கிறது. ஒரு தடவை " நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை " பாடலுக்கு கொங்கோ ட்ரம்ஸ் தாள வாத்தியமாக ஒலித்தது ஏற்றுக்கொள்ள முடியாத மன நிலையை ஏற்படுத்தியது.மேலும், வழமையாக இலங்கை இசைக் குழுக்களில் வீணையின் பங்கு மிகவும் குறைவாக இருக்கிறது. ஆனால் தென்னிந்திய திரையிசையில் வீணை பல இடங்களில் கையாளப்படுகிறது. வீணையின் இசையை வேறு வாத்தியங்கள் மூலம் இசைக்க முற்படல் என்பது பனை மரத்தில் தேங்காய் பறிக்க நினைப்பதற்கு ஒப்பானது என்பது உண்மை. புல்லாங்குழல் வீணை போற வாத்தியங்களை பயன்படுத்துங்கள்.

அகவே இவ்வாறான சில விடயங்களை இசைக்குழுவினர் கருத்திற் கொண்டால் சக்தி SUPER STAR உலக அளவில நல்ல வரவேற்பைப் பெறலாம்

2 comments:

maruthamooran said...

குறைபாடுகள் இருப்பினும் நல்ல முயற்சிகள் வரவேற்கப்பட வேண்டியதே.

ஆ.ஞானசேகரன் said...

வாழ்த்த வேண்டியவை